மெய்யுணர்வு

 

 ஹோம் ஒர்க் செய்யும் மகனின் அருகில் மகளை மடியில் அமர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த வினயா கணவன்  ஏன் வரவில்லை என்ற கவலையோடு காத்திருந்தாள்.

       "அம்மா, அப்பாவோட வண்டி சத்தம் கேக்கறது. நான் போய் கதவைத் திறக்கறேன். பாப்பா தூங்க ஆரம்பிக்கறா.  நீ அவளை மெதுவா எடுத்திண்டு போயி படுக்கையில விட்டுட்டு வா." சொன்னவாறே கதவைத் திறக்கச் செல்லும் மகனைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டே குழந்தையை உள்ளறையில் படுக்கப்போட்டுவிட்டு வெளியே வந்தாள் வினயா.    

               காலணிகளை கழற்றிய வேகமும் உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றி எறிந்த விதமும் வினயாவிற்கு இன்றும் மாதவனின் வேலைகள் சுணங்கிவிட்டது என்பதை உணர்த்தியது. "நான் போய் டீ கொண்டு வரேன்." வினயா நகர, ஒரு குவளையில் தண்ணீரோடு அங்கு வந்தான்  வருண். "இந்தாங்கப்பா" மகனைப் பார்த்து புன்னகைத்தவாறே ஒரு கையால் குவளையை வாங்கிக் கொண்டு மறு கையால் அவனை அணைத்துக் கொண்டான்.

           "அப்பா,  அடுத்த வாரம் எங்க ஸ்கூல் அனுவல்டே வருது. எனக்கு  இந்த வாட்டியும் சப்ஜெக்ட்ஸ் டாப்பர் பிரைஸ் கிடைச்சிருக்கு. அதோட பத்து நாள் முன்னாடி நடந்த ஸ்போர்ட்ஸ்ஸிலியும் மூணு பிரைஸ் இருக்கு. அதையும் ஸ்கூல் டே பங்ஷனில் குடுப்பாங்க." உற்சாகமாகப் பேசி வந்தவன் ஒரு நொடி  நிறுத்தி, "என் ஷூ ரொம்ப பொத்தல் ஆயிடுத்து. வேற வாங்கித் தருவீங்களாப்பா" .......

           "இன்னும் ஒரு வாரம் இருக்கில்ல அதுக்குள் வாங்கித் தருவார். அப்பா ரொம்ப களைச்சு வந்திருக்காரில்லையா இப்ப அப்பாவை  தொந்தரவு செய்யாம ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டு பையை பாக்பண்ணு" வினயா மகனிடம்  பேசிக்கொண்டே கணவனை டீயைக் குடிக்க வைத்தாள்.

        " பாவம் வருண் இந்த சின்ன வயசில நம்ம நிலைமை புரிஞ்சிக்கிட்டு எவ்வளவு சமத்தா நடந்துக்கறான்? ஒரு நல்ல மகனா படிப்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கற அவனுடைய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அப்பனா நான் இருக்கேன்...." இதென்ன பேச்சு? நம்ம போறாத நேரம் உங்க தொழிற் சாலை  இப்ப ஏதோ தகறாரல மூடிக் கிடக்கு. சீக்கிரமா நிலைமை சரியாகி நீங்க அங்க வேலைக்குப் போகத்தான் போறீங்க. வருண் கேட்ட ஷூ ஒரு செட் யூனிபார்ம் எல்லாத்துக்கும் நான் பணம் ஏற்பாடு பண்ணியாச்சு. "எப்படி" நம்மகிட்ட விக்கறத்துக்கு ஏதாவது இருந்ததா என்ன "?

 

 "வருண் பிறந்த நாளுக்கு உங்க ஆபிஸ்காரங்க குடுத்த வெள்ளித் தட்டு நான் எதிர்பார்த்ததைவிட நல்ல விலைக்குப் போச்சு. நீங்க மார்க்கெட்டிங் வேலையில அலைஞ்சுக்கிட்டு இருக்கீங்களே, இன்னிக்கு ஏதாச்சும் விக்க முடிஞ்சுதா?"

 

          "கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினதிலே ஒரே ஒரு கம்பெனியில கொஞ்சம் சாதகமா பேசி இருக்காங்க. நாளைக்கு ஆர்டரை கன்பர்ம் பண்றதா சொல்லி இருக்காங்க.இன்னும்  நாலு நாளில் இது போல இரண்டு ஆர்டராவது புடிச்சா இந்த கம்பெனி விற்பனைப் பிரிவில வேலை தருவதா சொல்றாங்க. என் வண்டி வேற ரொம்ப தகராறு பண்ணுது. எப்படியோ வாரக் கடைசி வரைக்கும் சமாளிச்சிட்டேனா ஞாயித்துக் கிழமை மெக்கானிக் கடையில விடலாம். ஆனா அதுக்கு எவ்வளவு செலவாகுமோ தெரியலை. "

 

      "நானும் கார்மெண்ட் பாக்டரியில அட்வான்ஸ் கேட்டிருக்கேன்.  "ஏய், அதெல்லாம் வேண்டாம். ஏற்கெனவே கைக்குழந்தையை வச்சுக்கிட்டு வீட்டுவேலை பாக்டரின்னு கஷ்டப்படறே இதுல லோன் போட்டு்ட்டு ஓவர்டைம் பார்க்கற மாதிரி ஆகிடப் போகுது.  நம்ம பெண் வீட்டுலசொகுசா  இல்லாம பாக்டரிக்கும் வீட்டுக்கும் உன்னோட அலையறதே மனசுக்குக் கஷ்டமா இருக்கு வினயா......" "வீணா ஏன் கவலைப் படறீங்க, எங்க பாக்டரி குழந்தைக் காப்பகத்தில் அவளை நல்லபடியாப் பாத்து்கறாங்க. அங்க இருக்கற ஆயாம்மாவோட செல்லப் பெண் இவதான். சரி போய் கைகால் கழுவிட்டு வாங்க.  குழந்தை முழிச்சுக்கறதுக்குள்ள சாப்பாட்டை முடிச்சிடலாம். வருண் வாசல்ல விளையாடப் போயிட்டான் போல அவனைக் கூப்பிடுங்க." வினயா பேசி முடிப்பதற்குள் உள்ளே ஓடி வந்தான் வருண்.

 

       "அம்மா, வாசலில் ஒரு ஆண்டி ரெண்டு பெரிய பையில சாமான் கொண்டு வந்திருக்காங்க. நீ வந்து பாரேன்." எளிமையான உடையில்  ஒரு நடுத்தர வயது பெண்மணி இவளைக் கண்டதும், "வணக்கம்மா,நல்லதரமான அப்பளம், வடாம் பிஸ்கட், முறுக்கு எல்லா் சுத்தமா வீட்டிலேயே தயார் செஞ்சு விக்கறோம். பாக்கறீங்களா?" குனிந்து பையிலிருந்து எடுப்பவளை தடுப்பது போல் "எங்களுக்கு எதுவும் வேண்டாங்க. கிளம்புங்க" ஏய் வருண் உள்ள வா" அதட்டும் குரலில் பேசிக் கொண்டு உள்ளே போகத் திரும்பிய வினயாவின் கைகளைப் பற்றிய வருண் "அந்த ஆண்டியைப் பார்த்தா பாவமா இருக்கும்மா. நான் ஸ்கூல் விட்டு வரும்போது பக்கத்துப் போர்ஷன் ஆண்டி நமக்கு கரண்ட் பில் கட்டிட்டு பாக்கிப்பணம் 50 ரூபாய் கொடுததாங்க. உங்கிட்ட கொடுக்க மறந்துட்டேன். இந்தா. நீ சரின்னா இதில எதாச்சும் வாங்கலாம்......"

       முகம் கழுவிக் கொண்டு வந்த மாதவன் மகன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான். "உனக்கு என்னவேணுமோ  வாங்கிக்கவருண். அப்பா இன்னும் ஒரு 50 ரூபாய் தரவா "  "ரொம்ப தாங்க்ஸ் சார்.....கண்ணா உனக்கு என்ன வேணும்னு பாரு" விற்பனைப் பெண் பையிலிருந்து எடுப்பதை வருண் நோட்டமிட்டுக் கொண்டுருக்க, மனைவியிடம் மெல்லிய குரலில் " இந்த அம்மாவுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்ல வினயா. அவங்க பையைத் தூக்கிட்டு செரு்ப்புத் தேய வீடு வீடா  ஏறி இறங்கறாங்க. நான் ஒரு ஓட்டை வணடியில பாண்ட் சட்டைப் போட்டுக்கி்ட்டு கம்பெனி கம்பெனியா ஆ்ர்டர் பிடிக்க அலையறேன். யாரு கண்டா நம்ம கதையை விட அவங்க நிலைமை இன்னும் பரிதாபமாகக் கூட இருக்கலாம் இல்லையா?" எனறான்.

          கணவனின் பெருந்தன்மையும் மகனி்ன் உபகார சிந்தையும் வினயாவின் மனத்தை நெகிழச் செய்தது. "நீ்ங்க சொன்னதுரொம்ப சரிங்க நம்மைவிட கஷ்டப் படறவங்களுக்கு நாம செய்யற இந்த சின்ன உதவி ஆண்டவன் நமக்குக் காட்டப் போற பெருங்கருணைக்கு அடித்தளமா அமையட்டும் " என்று சுவாமி படங்களைப் பார்த்து கைகூப்பினாள்.

 

 

 

               ----------------------------------------

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu